தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது விவசாயிகள் கூறியதாவது. பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 3 ஊக்கத்தை வழங்கி உள்ளது. இந்தத் தொகை விரைவாக பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி முகாம்களில் ஏற்கனவே பயன் பெற்றவர்கள் மீண்டும், மீண்டும் பயன்பெறுவதை தவிர்த்து இதுவரை பயன்பெறாத விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வேளாண் குழுக்களின் உறுப்பினர்களை மாற்றி அமைக்க வேண்டும். கரும்பு அரவையின்போது சக்கரை சத்து குறைவதால் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை குறைகிறது. இதற்கு தீர்வு காண கரும்பு விளைச்சலை அதிகரிக்க பல்வேறு வழிகாட்டுதல்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்க ப்பட்டுள்ளது. எத்தனை விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. என்பது குறித்து தகவல்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். மாவட்டத்தில் அதிக அளவில் விளையும் தக்காளியை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படும் அவரை, துவரை, கொள்ளு ஆகியவற்றிற்கு வெளி மார்க்கெட்டுகளில் உரிய விலை கிடைப்பதில்லை. எனவே ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் சதீஷ் பேசுகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் உள்பட பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



