சுசீந்திரம், மார். 24 –
நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளையை சேர்ந்தவர் மேக்மோகன் (52). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் தான் வேலை இல்லாமல் இருந்த காலத்தில் கொல்லங்கோடு கண்ணநாகம் பகுதியை சேர்ந்த ஜாண், சதீஸ் ஆகியோர் வேலை வாங்கி தருவதாக கூறினர். அவர்களது வார்த்தையை நம்பி ரூ.50 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வேலை எதுவும் வாங்கி தரவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது அதனையும் தர மறுத்து மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அறிவுறுத்தியதை தொடர்ந்து சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், சப் இன்ஸ்பெக்டர் தனிஸ் லியோன் ஆகியோர் விசாரணை நடத்தி ஜாண், சதீஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


