களியக்காவிளை, மார்ச் 26 –
களியக்காவிளை பகுதி கல்லுத்தறை விளை என்ற இடத்தை சேர்ந்தவர் செல்வரோஸ் மனைவி ரோஸ்மேபல் (52). இவருக்கும் இவரது கணவரின் உடன் பிறந்த தம்பி சுபனேஷ் (57) க்கும் வீட்டிற்கு மின் இணைப்பு எடுப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் ரோஸ்மேபல் வீட்டிற்கு சாலையோரம் நின்ற மின் கம்பத்திலிருந்து இணைப்பு எடுக்க முயன்றனர். அப்போது சுபனேஷ் மற்றும் அவரது மனைவி லலிதா குமாரி ஆகியோர் கத்தியால் ரோஸ் மேபலை குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட ரோஸ் மேபல் தரப்பினர் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி இன்று களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


