நாகர்கோவில், மே 14 –
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவை நோக்கி நேற்று நள்ளிரவு கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் இரவு 12 மணி அளவில் செட்டிகுளம் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் சென்றது. அப்போது அந்த கார் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, பின்பு சாலை நாடுவே இருந்த சென்டர் மீடியன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறங்கியது.
மேலும் காரின் உள்ளே கேன்களில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதி முழுவதும் மண்ணெண்ணெய் வாடை வீசியது. உடனடியாக விபத்து குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கும், போக்குவரத்து போலீசர்களும் தகவல் தெரிவித்தனர். போலீசார் மீட்பு வாகனத்தின் உதவியுடன் விபத்துக்குள்ளான காரை சாலையில் இருந்து அகற்றி ஓரமாக நிறுத்தினர்.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சாலையில் கொட்டி கிடந்த மண்ணெண்ணெயை அகற்றும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து சாலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய கார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். டிரைவர் படுகாயமடைந்த நிலையில் இருப்பதால் அவரைப்பற்றி எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை. காரின் பதிவு எண்ணை வைத்து அந்த கார் யாருடையது? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



