மார்த்தாண்டம், நவ. 28 –
தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வட்டவிளாகம் என்ற பகுதியை சேர்ந்த ராஜு (46). இவர் உட்பட 10 மீனவர்கள் ஜெபஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 4ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க ஆழ் கடலுக்கு சென்றனர். கடந்த 9ம் தேதி அன்று இரவு ஆழ் கடலில் மீன் பிடித்து விட்டு விசைப்படகில் தூங்கும்போது படுத்திருந்த ராஜு தவறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்திய கடற்படை இணைந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தி, மாயமான ராஜுவை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்எல்ஏ கோரிக்கை அளித்து இருந்தார்.
மேலும் கடலில் தவறி விழுந்த மாயமான மீனவர் ராஜுவின் வருமானத்தை நம்பி இருந்த அவரது மனைவி ஆரோக்கிய மேரி, இரண்டு குழந்தைகளும் எவ்வித வருமானம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் என்ற தகவல் ராஜேஷ்குமார் எம்எல்ஏ கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மாயமான மீனவர் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரம் நிதி உதவி அவரது மனைவி ஆரோக்கிய மேரியிடம் ராஜேஷ் குமார் எம்எல்ஏ வழங்கினார்.
மேலும் அவர் கூறுகையில்: விசைப்படகில் இருந்து தவறி கடலில் மாயமான மீனவர் ராஜு குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அல்லது தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



