நாகர்கோவில், ஜூலை 30 –
நாகர்கோவில் கோட்டார் அன்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஒரு பெண் தனியாக இருந்தார். அப்போது அந்த வீட்டிற்கு காவி வேட்டி அணிந்து கொண்டு 3 சாமியார்கள் வந்து உள்ளனர். அவர்கள் ஒரு கோவிலில் இருந்து வருவதாக கூறி மேலும் அந்தப் பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டுள்ளனர். அந்தப் பெண் அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக வீட்டிற்குள் சென்று உள்ளார். அப்போது அந்த 3 பேரும் பெண்ணிடம் உங்கள் வீட்டில் தீய சக்தி உள்ளது அதனை போக்க மஞ்சள் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.
அவர்களின் பேச்சை நம்பிய பெண் மஞ்சள் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்துள்ளார். அதனை வாங்கியவர்கள் மஞ்சள் தண்ணீரை பெண்ணின் முகத்தில் தளித்துள்ளனர். மேலும் மறைத்து வைத்திருந்த மயக்க பொடியை பெண்ணின் முகத்தில் போட்டனர். இதில் அந்த பெண் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அந்த 3 பேரும் வீட்டில் புகுந்து அங்கிருந்து ஒரு சிறிய வெள்ளி சிலையை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து அந்தப் பெண் எழுந்த போது, வந்தது சாமியார்கள் அல்ல திருடர்கள் என்பது தெரிந்து, கோட்டாறு போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சாமியார் வேடம் அணிந்து 2 பேர் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் தெரியாத நபர்களை அனுமதிக்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


