திருவண்ணாமலை, நவ. 5 –
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள பகுதிகள் மழைநீரால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அமைச்சர் எ.வ.வேலு, சமுத்திரம் ஏரியில் இருந்து துரிஞ்சல் ஆற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்டு பணியை விரைந்து முடிக்க துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: நெடுஞ்சாலைத்துறை சார்பாக துரிஞ்சல் ஆற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணி 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போழுது வரை 3 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் மேம்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் தூர்வாரும் பணிகள் நிறைவடையும் என்றார்.
அப்போது கலெக்டர் க. தர்ப்பகராஜ், சி.என். அண்ணாதுரை எம்பி, நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் கே. அன்பரசு, மாநகராட்சி ஆணையர் எஸ். செல்வபாலாஜி, திமுக மாநகராட்சி செயலாளர் ப. கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ். பன்னீர் செல்வம், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா. ஸ்ரீதரன், பகுதி பொறுப்பாளர் ஷெரீப் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



