விளாத்திகுளம், ஏப்ரல் 17 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெருநாழி விலக்கில் தேர்தல் பறக்கும் படை நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் சேகர் தலைமையில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்த தனியார் பேருந்தினை சோதனை செய்தனர்.
அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய அருப்புக்கோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை சோதனை செய்த போது அவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் 35 லட்சத்து 22,000 பணம் இருப்பது தெரிய வந்தது. அதேபோன்று மற்றொரு பயணி விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 2 லட்சத்து 21 ஆயிரத்து 51 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இருவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் இல்லாமல் பல லட்ச ரூபாய் பணம் என்பதால் அந்தப் பணத்தை தூத்துக்குடி வருமானவரித்துறை உதவி இயக்குனர் பாலமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பணம் அவர்களுக்கு எப்படி வந்தது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்தில் இரண்டு பயணிகளிடம் 37 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



