கன்னியாகுமரி, ஏப். 29 –
பிரசித்தி பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது.
மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடை கால சீசனாக கருதப்படுகிறது. கோடையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகையால் குடும்பத்துடன் சுற்றுலா வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. காலையில் சூரிய உதயமான காட்சியை காண ஏராளமன சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள். பின்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு சேவை வழக்கம்போல தொடங்கியது. அதன் பின்னர் உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை மற்றும் கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக சென்று திருவள்ளுவர் சிலையையும் கண்டு களித்தனர்.
தற்போது வெயில் அதிகமாக காணப்படுவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் நேற்று காலையிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பகலில் வெயில் அதிகமாக இருப்பதால் காலை மாலை நேரங்களில் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



