ஈரோடு, மே 15 –
ஈரோடு பவளத்தான் பாளையம் ஏஈடி பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மற்றும் பெருந்துறை, பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இதில் தனியார் பள்ளிகளில் செயல்படக்கூடிய வாகனங்களில் அரசின் விதிமுறைகளின்படி, வாகனங்களின் இருக்கைகள், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வழி கதவு, தீயணைப்பு கருவி, படிகட்டுகள், முதலுதவி பெட்டி, முதலுதவி உபகரணங்கள், வாகனத்தில் முன், பின் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? மேலும், பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் மேற்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த ஆய்வுகளில் வாகனங்களில் புத்தகப்பை வைக்கும் தனி இடம், பள்ளியின் சின்னம் காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண்கள், படிகட்டு உயரம், லாக்புக், ஜன்னல் கம்பிகள், ஓட்டுநர் கேபின், கதவுடன் இடதுபக்க வழி உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 100 பள்ளிகளைச் சேர்ந்த 1,096 வாகனங்களுக்கு வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. போக்குவரத்து விதிமுறை குறையுள்ள பள்ளி வாகனங்கள் ஒரு வாரத்திற்குள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடராஜன் (ஈரோடு), பூங்குழலி (பெருந்துறை). மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தனசேகர், முத்துசாமி, நித்யா ஆகியோர் உடனிருந்தனர்.



