இராமநாதபுரம், பிப். 10 –
ராமநாதபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மத்திய மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை மனு வழங்கினர், அதில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் மற்றும் அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்ய வேண்டும். தமுமுக வின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட
3.5% இட ஒதுக்கீட்டை 7% உயர்த்தி வழங்க வேண்டும். இஸ்லாமியர்கள் தொழில் செய்வதற்கு வட்டி இல்லாத கடன் உதவி வழங்க வேண்டும். சக்கரக்கோட்டை கம்மாய் தூர் வார வேண்டும். கரை அமைத்து பாசனத்திற்கு ஏற்ப நீர் தேக்கம் செய்து பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும்.
இராமநாதபுரம் நகர் பகுதியில் கோவில்கள், மசூதிகள், கிறிஸ்துவ ஆலயம், மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள், அருகே செயல்படும் மதுபான கடைகளை நகருக்கு வெளிப்புறம் இடமாற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக அண்ணன் தம்பியாக வாழும் சூழலில் மத மோதல்களை உருவாக்கும் விதமாக போலி முகநூலில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நபர்கள் மீது கூடுதல் சட்டத்தை கொண்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் காதர் பிச்சை, துணை செயலாளர் ஜாகீர் பாபு, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகமது தமீம், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் நைனா முகமது, நகர் தலைவர் முகமது தாஜுதீன், நகர் மருத்துவ சேவை அணி செயலாளர் செய்யது அக்பர், யூசுப் கலந்து கொண்டனர்.



