நாகர்கோவில், டிசம்பர் 9 –
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் நிறுவ பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வி இயக்கக இயக்குனர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனருடன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான செயல்முறை மற்றும் தகுதி தணிக்கைகள் குறித்து ஆலோசித்து அதில் உரிய வசதிகள் கொண்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் விவரம் கோரப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் ஐடிஐ க்கு குறைந்தபட்ச நில தேவையாக 0.5 ஏக்கர் (50 சென்ட் நிலம்) இருக்க வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட செய்முறை அறைகள், ஆய்வாளங்கள் அல்லது பிற கட்டிடங்கள் பயன்பாடு இன்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருக்கும் நிலையில் இருந்தால் அத்தகைய பள்ளிகளை ஐடிஐ அமைப்பதற்கு பயன்படுத்தலாம்.
தொழில் பயிற்சி நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். 4 தொழில் மண்டலங்கள், தொழில் சாலைகள் அல்லது தொழில் துறை பகுதிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதன் மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
ஆகவே மேற்கண்ட வசதிகள் கொண்டுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


