கிருஷ்ணகிரி, பிப். 07 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவிஅருகே உள்ள மஜித்கொல்லஹள்ளி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாரயணசாமி நாயுடுவின் 101-வது பிறந்நாள் விழா மற்றும் விவசாய சங்கத்தின் கிளை சங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக விவசாய சங்கத்தின் ஆலோசகர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிளை சங்க தலைவர் பாலாஜி, துணைத் தலைவர் முனுசாமி, கிளைச் செயலாளர் கணேஷ் குமார், ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய தலைவர் முனிரத்தினம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொறுப்புச் செயலாளர் அனுமந்தராசு, மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மேலும் இந்த விழாவிற்கு தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடுவின் திருஉருவப்படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தி கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார்கள். மேலும் இந்தக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்க சிபில் ஸ்கோர் பார்ப்பதை உடனடியாக கைவிட வேண்டும், மா விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை பேரிடர் இழப்பு தொகை வழங்க வேண்டும், அண்டை மாநிலம் போல் மா விளைச்சல் குறையும் போது டன்னுக்கு ரூபாய் 10 ஆயிரம் விதம் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும், யானை மற்றும் மான் போன்ற காட்டு விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், கே.ஆர்.பி.அணையின் இடதுபுற கால்வாய் மற்றும் வலது புறக் கால்வாய்களை தூர்வாரி சந்தூர் வரையிலான ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சிங்காரப்பேட்டை அருகே உள்ள கடப்பாறை ஆற்றின் குறுக்கே அணை கட்டி விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த சுப்பிரமணி ரெட்டி, முனுசாமி, கண்ணப்பன், பாஸ்கர், திம்மராயன், கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.



