தஞ்சாவூர், அக்டோபர் 23 –
தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையை யொட்டி 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மேயர் சண் ராமநாதன். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றபின் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சீர் செய்யும் வகையில் 4 மண்டல தலைவர்களைக் கொண்டு மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
4 மண்டலங்களிலும் தாழ்வான இடங்களில் மழை நீரால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், மின் மோட்டார்களை கொண்டு மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்குவதற்கான நிவாரண முகாம்கள் 9 இடங்களில் ஏற்படுத்தப்பட்டு அங்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் அவசர நடவடிக்கை எடுக்க 25 பணியாளர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளது.
24 மணி நேரமும் இயங்கும் கரந்தை, சீனிவாசபுரம், கல்லுக்குளம், மகர் நோன்புசாவடி ஆகிய நகர் நல மையங்களில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் புகார்களை 1800-425-1100 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார் மேயர். இக்கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆணையர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா சரவணன், கலையரசன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.



