தஞ்சாவூர், மார்ச் 21 –
தஞ்சாவூரில் கரகாட்டம் மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் உள்ளன. இந்த 8 தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டது.
இந்த ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டர்ருமான பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து, 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார். பின்னர் மேள தாளம் முழங்க, கரகாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டத்துடன் இந்த ஊர்வலம் புறப்பட்டு, சோழன் சிலை முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து மெய்யன், மெய்யாள் என்னும் விழிப்புணர்வு தலையாட்டி பொம்மையை திறந்து வைத்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிரூபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் தூதர்களாக மெய்யன், மெய்யாள் என்ற தஞ்சாவூரின் பழமையான தலையாட்டி பொம்மையை வைத்திருக்கிறோம். மெய்யன், மெய்யாள் என்ற பெயரில் அர்த்தம் உண்மை. தேர்தல் மை எப்படி வலிமையானது. அது எப்படி நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதே பறைசாற்றுவதற்காக அந்த பெயரை தேர்தல் தூதர்களுக்கு வைத்திருக்கிறோம். முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, மாநகராட்சி ஆணையர் கண்ணன், துணை கலெக்டர் பயிற்சி கமலேஷ், தாசில்தார் சிவக்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



