நாகர்கோவில், அக். 17 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இயங்கி வரும் பிரபல நல்ல பெருமாள் துணிக்கடையில் நேற்று இரவு லிஃப்ட் பழுதாகி நடுவழியில் நின்றதால் லிஃப்டில் பயணித்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கி பரிதவித்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிகடைகள், சுவிட் கடைகள், மற்று பட்டாசு கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தாழக்குடியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் துணி எடுக்க வந்தனர். இவர்கள் கடையின் மேல் தளத்திற்கு செல்வதற்காக கீழ் தளத்தில் இருந்து 3 சிறுவர்கள் மற்றும் லிஃப்ட் ஆப்ரேட்டர் உட்பட மொத்தம் 7 பேர் சென்றுள்ளனர். இந்த லிஃப்டானது 4 பேர் மட்டுமே பயணிக்கும் அளவில் சிறிய பரப்பளவு கொண்டதாகும் இந்நிலையில் தீபாவளி பண்டிகை என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது.
இதனால் லிஃப்ட் எடையை மீறி ஆட்களை ஏற்றி சென்றதால் 3-வது தளத்திற்கு இடையில் லிப்டில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு லிப்ட் நகராமல் நடுவழியில் நின்றது. இதனால் லிப்டில் சிக்கியவர்கள் பதறிப்போய் வெளியே நின்ற உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து உறவினர்கள் கடை ஊழியர்களிடம் தெரிவித்த பிறகும் வெகு தாமதமாக ஊழியர்கள் செயல்பட்டதால் உறவினர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும், மாவட்ட எஸ்பிக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக எஸ்பி ஸ்டாலின் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தது மட்டுமல்லாமல் கோட்டார் மற்றும் வடசேரி காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் லிப்ட்டை திறக்க முயன்றனர். ஆனால் திறக்க முடியாததால் தீயணைப்பு வீரர்கள் லிப்ட் கதவை 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி உடைத்து உள்ளே தவித்த மூன்று குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 7 பேரை மீட்டனர். லிப்டில் சிக்கியவர்கள் பத்திரமாக மீக்கப்பட்டதை அடுத்து துணி எடுக்க வந்தவர்கள் மற்றும் கடை ஊழியர்கள் தீயணைப்பு வீரர்கள் போலீசார் என அனைவரும் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது நாங்கள் குடும்பத்துடன் துணி எடுப்பதற்காக வந்தோம். மேல் தளத்தில் இருந்து துணி எடுத்து விட்டு கீழே வரும் போது லிப்ட் நகராமல் அப்படியே நின்றது. நாங்கள் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து பல மணி நேரம் ஆகியும் மீட்க எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் எங்கள் உறவினர் மூலம் போலீசுக்கு தகவல் சொல்லி அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் வந்த பிறகு லிப்டை உடைத்து எங்களை மீட்டனர் என அவர் கூறினார்.



