ஈரோடு, ஏப். 3 –
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஈரோட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 வருடமாக நான் நடத்திய ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொன்னோம். அது டெவலப்மெண்ட் மாடல்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி பா.ஜ.க.வோட கிளைச் செயலாளராக இருக்க கூடிய பழனிசாமிக்கு எரிச்சல் தருகிறது. வயிறு எரிகிறது. அவரது எண்ண ஓட்டம் என்னவென்றால், என்னடா, கால்களால் தவழ்ந்து போய் 2 கால்களையெல்லாம் வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். இந்த தி.மு.க.வும் ஸ்டாலினும் ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க விட மாட்டேன்கிறார்கள் என்ற பொறாமையில் பொய்யையும் புரளியையும் கிளப்புகிறார்.
பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? அ.தி.மு.க.வின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் சொன்னதே. ஒரு பெண் எஸ்.பி க்கே பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி. பி.யைப் பாதுகாத்தது. அந்தப் பெண் எஸ்.பி.யை வழிமறித்து ஒரு டி.ஜி.பி.யே மிரட்டியது பழனிசாமி ஆட்சியில் தானே?
பெண்களைப் பாதுகாத்து கல்லூரிகளுக்கும் வேலைகளுக்கும் அனுப்பி தலைநிமிர வைத்து, உற்ற தோழனாக இருப்பது திராவிட மாடல் ஆட்சிதான் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. ஆட்சியை கொண்டுவந்து தமிழ்நாட்டை கபளீகரம் செய்துவிடலாம் என்று கற்பனைக் கோட்டையில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.



