மார்த்தாண்டம், நவ. 20 –
குழித்துறை வி எல் சி திருமணம் மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்குகிறது. கொல்லத்தைச் சேர்ந்த விஎல்சி முந்திரி தொழிற்சாலை உரிமையாளர் பொதுமக்கள் வசதிக்காக குழித்துறை வாவுபலி பொருட்காட்சி மைதானத்தில் விஎல்சி திருமண மண்டபம் கட்டி 48 ஆண்டுகளுக்கு முன் குழித்துறை நகராட்சியிடம் ஒப்படைத்தார்.
குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி எல் சி திருமண மண்டபம் பழுதடைந்து மழைக் காலங்களில் ஒழுகுகிறது. இதனால் இந்த மண்டபத்தை முழுமையாக இடித்து மாற்றி புதிய மண்டபம் கட்ட நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இதற்கான கோரிக்கை வைத்தனர். அமைச்சர் கே என் நேருவை நேரில் சென்னையில் சந்தித்து வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ரூபாய் 6 கோடி 50 லட்சம் மதிப்பில் புதிய திருமண மண்டபம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது. விஎல்சி திருமண மண்டபம் முழுமையாக இடித்து மாற்ற நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகளும் துவக்கப்பட்டது.
இந்த நிலையில் திருமணம் மண்டபத்தை முழுமையாக அகற்ற நகராட்சிக்கு கட்டணம் செலுத்தலாம் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் ஈ டெண்டர் கோரப்பட்டது. திருவனந்தபுரம் அருகே பூவாரை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூபாய் 15 லட்சம் நகராட்சிக்கு செலுத்தி டெண்டர் எடுத்தனர்.
மண்டபத்தில் உள்ள மேல் பகுதி ஷீட், கிரில், பேன், லைட் , கதவு, ஜன்னல், கண்ணாடி போன்ற அனைத்தையும் எடுத்துச் செல்லலாம். மேலும் இடிக்கப்படும் மண் போன்றவைகளை அகற்றி 20 நாளில் காலி மனையாக நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான பணி துவங்கியது. ஜேசிபி மூலம் இடிக்கும் பணி நடந்தது.
கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு பொருட்கள் அனைத்து அகற்றப்பட்டு டெம்போ மூலம் இடிக்கப்பட்ட கட்டிடக்கழிவுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. பணி இறுதி கட்டத்தை நெருங்கியது.



