நாகர்கோவில், ஜூலை 4 –
கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் மற்றும் 5 வயது மகளுடன் கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோதையத்தில் உள்ள படகு துறைக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்கிருந்த மிதி படகுமூலம் பேராசிரியை, அவரது குழந்தை, பெற்றோர் சேர்ந்து ஆற்றின் அழகை ரசிக்க சென்றனர். இவர்கள் ஆற்றின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு படகில் வந்தவர்கள் பேராசிரியை சென்ற மிதி படகை வழிமறித்து, அவர் மீது தண்ணீரை தளித்து ஆபாசமாக பேசி மிரட்டி, மானபங்க படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கரை திரும்பியதும் சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பேராசிரியை புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் பேராசிரியை புகாரின் பேரில் திற்பரப்பு பகுதியை சேர்ந்த பிரபு (36), டார்வின் பிரைட், ராபின் ஆகிய 3 பேர் மீது கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


