கோவை, மே 30 –
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிவக்குமார் கூறியதாவது: எல்ஜி பிடிகியூஐஎ+ தனிநபர்களின் உரிமைகளைக் கொண்டாடவும், பெருக்கவும் மற்றும் வழுபடுத்தவும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் சுயமரியாதை மாதமாக அங்கீகரிக்கப்படுகிறது. லெஸ்பியன், கே, பைசெக்சுவல், டிரான்ஸ், குயர், இன்டர்செக்ஸ், ஆரோ/ஏஸ் தனிநபர்கள் பாலினம் மற்றும் பாலிர்ப்பு அடிப்படையிலான சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வகையான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். மேலும் இந்த சுயமரியாதை மாத நிகழ்வுகள் மூலம் பாலினம் மற்றும் பாலுணர்வை உள்ளடக்கிய உரையாடல்களை உருவாக்க உத்தேசித்துள்ளோம்.
கோவை வானவில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த சுயமரியாதை மாதத்திற்கான பதிவுகளில் பின்வரும் கோரிக்கைகளை வைக்கிறோம். கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பு, 2024ல் வரைவு செய்யப்பட்ட எல்ஜி பிடிகியூஐஎ+ மாநிலக்கொள்கையை இறுதி செய்ய வலியுறுத்துதல், இது திருநர்கள் மட்டுமின்றி தன்பால் ஈர்ப்பாளர்கள் இருபாலீர்ப்பாளர்கள் மற்றும் பால் புதுமையினர் நபர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுகிறோம்.
மேலும் ‘திருநங்கைகள் நல வாரியத்தின்’ பெயரை மேலும் உள்ளடக்கியதாக (உதாரணமாக: இடைப்பால் மற்றும் திருநம்பிகளை உள்ளடக்கி) மாற்றுவதுடன், அதில் பல்வேறு தரப்புப் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் பரிந்துரைக்கிறோம் என்று கூறினார்.



