நாகர்கோவில், ஜூன் 6 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் உள்ளாட்சி நிர்வாகங்களால் பாசன கால்வாய்கள், குளங்கள் உட்பட்ட நீர்நிலைகளை அழித்து சேதப்படுத்தி, சாலையாக மாற்றப்படும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை தடுத்து நிறுத்தி, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டிய நீர்வளத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதும், அதன் காரணமாக கடைவரம்பு விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயமும், இயற்கை எழிலும் அழிந்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.
அந்த வகையில், கடந்த சில வாரங்களில் பட்டணங் கால்வாயின் கிளைக் கால்வாய்களான காட்டுக்கடை – வாணியக்குடி – ரீத்தாபுரம் கிளை கால்வாய் மற்றும் காட்டுக்கடை -சைமன்காலனி – ரீத்தாபுரம் கிளை கால்வாய் ஆகியவற்றிலுள்ள ‘சைபன்கள்’ உடைத்து அழிக்கப்பட்டு, மண்ணால் மூடப்பட்டு, கான்கிரீட் மற்றும் தார் போட்டு பாலப்பள்ளம் பேரூராட்சி நிர்வாகத்தால் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல கிலோமீட்டர் தூரம் சானல் மற்றும் கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் கால்வால்கள் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.
இத்தகைய குற்றச்செயல்கள் நடைபெறும் போது நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தடுத்து நிறுத்த வேண்டும். சேதப்படுத்திய நபர்கள் மீது காவல்துறையில் முறையாக புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தியவர்களை வைத்தே கட்டுமானங்களை சீரமைக்க வைக்க வேண்டும். அல்லது அதற்கான தொகையை குற்றவாளிகளிடம் இருந்து சட்ட ரீதியாக வசூலிக்க வேண்டும். என்ற சட்ட விதிமுறைகள் உள்ளது.
ஆனால், மேற்படி கால்வாய் சைபன்களை சமூக விரோதிகள் – ஒப்பந்ததாரர் என்ற பெயரில் உடைப்பதை நேரடியாக பார்த்த நீர்வளத்துறை பணியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர் போன்றோர் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன்- இது சம்பந்தமான தகவலையும் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை.
தற்போது நீரினை பயன்படுத்துவோர் சங்க ஆட்சிமண்டல உறுப்பினர் ஜஸ்டின்தாஸ் என்பவர் இது குறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக புகார்மனு அளித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறையின் மேற்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிறகும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, அடுத்தகட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேட்டு உயர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜஸ்டின் தாஸ் தெரிவித்தார்.


