நாகர்கோவில், பிப். 18 –
குமரி மாவட்டம் வெள்ளமோடி மற்றும் குழித்துறை அருகே பாலவிளை உட்பட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக ஒரு வருடம் மண் எடுக்க குமரி மாவட்ட கனிம வள துறை உதவி இயக்குநர் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள மலை குன்று அழிக்கப்பட்டு அதில் இருந்த பாறைகளும் மற்றும் விவசாயத்திற்கு செல்லும் கால்வாய் பகுதிகளும் உடைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஒரு டெம்போ மண் எடுக்க 600 ரூபாயை ஒரு வெளியூர் கும்பல் ஒன்று குழுவாக இருந்து வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க கூட கடுமையான சட்ட விதிகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பெற வேண்டி இருக்கும் நிலையில், சுற்று சூழல் அனுமதி இன்றி மலை குன்று பகுதியை முழுமையாக அழித்து அதில் இருந்து சட்ட விரோதமாக மண் கொள்ளை நடத்த மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரே மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் ரகசியம் காத்து வருட கணக்கில் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் எந்த அனுமதியும் இன்றி அதில் இருந்த பாறைகளையும் உடைத்து எடுத்து சட்ட விரோதமாக பாறைகளையும் உடைத்து கால்வாய்களையும் அழித்து மண் கடத்தி வருகின்றனர். இதற்கு பெரும் லஞ்சம் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாக 5 சென்ட் 10 சென்ட் இடங்களில் வீடு கட்டுவதற்கு நிலத்தை சரி சமன் செய்ய அனுமதி கேட்கும் போது மிக கடினமான சட்ட வழிமுறைகளை பின்பற்றும் கனிமவளத்துறை பெரும் மண் கொள்ளை நடத்த விதிகளை தளர்த்தி பெருமளவு லஞ்சம் பெற்று அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைச்சர்கள் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் பெறுவதாக மேற்படி பணம் வசூல் செய்யும் கும்பல் கூறியதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை கேட்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்து கனிமவளத்துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விவசாய சங்கங்கள் தற்போது வரும் 24ம் தேதி குமரி மாவட்டத்திற்கு வர இருக்கும் தமிழக முதல்வரிடம் நேரில் மண் கொள்ளை குறித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.



