நாகர்கோவில், ஜூன் 16 –
குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மராமத்து பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது: பம்பம் பகுதியில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வாவுபலி பொருட்காட்சி திடல் மண்டபத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள பழைய மண்டபத்தை அகற்றிவிட்டு ரூ.6.5 கோடி மதிப்பில் புதிய மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று மாத காலத்திற்குள் இப்பணிகளை முழுமையாக முடித்து, மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து குழித்துறை சந்திப்பில் நெடுஞ்சாலை பகுதிகளில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கியிருப்பதால், அவற்றை உடனடியாக சீர்படுத்திட பொதுமக்கள் கோரிக்கை வைத்தன் அடிப்படையில் போர்கால அடிப்படையில் இப்பணிகளை மேற்கொள்ள நகராட்சி செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ரூ.14.50 கோடி மதிப்பில் மார்த்தாண்டத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நவீன தினசரி காய்கறி சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகாக கடைகள் அமைத்து காய்கறி விற்பனை செய்வோரை புதிய நவீன சந்தையில் காய்கறி விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி மண்டல இயக்குநர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தாமிரபரணி ஆற்றில், சப்பாத்து பாலம் பகுதிக்கு மறுபுறத்திலிருந்து மழைக்காலங்களில் மீன் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் கலப்பதாகக் கூறப்படுகிறது. இது பொதுமக்களுக்குப் பெரிய சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குவதோடு, இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதற்கு நகராட்சித் துறை மூலம் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்த வகையான கழிவுகளையும் வெளியில் இருந்து ஆறுகளுக்குள் கொட்டுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி ஆற்றில் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
நிபா வைரஸ் பற்றி யாரும் அச்சப்பட தேவையில்லை. இருந்தாலும் முன்நடவடிக்கையாக கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொள்ள காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டள்ளது. இவ்வாறு கூறினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறை, அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, பொதுமக்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும் குழித்துறை அரசு மருத்துவமனையினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, முழு சுகாதாரத்துடன் இருக்கின்றதா எனவும், நோயளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
நடைபெற்ற ஆய்வுகளில் நகராட்சி மண்டல இயக்குநர் நகைந்திரன், மண்டல செயற்பொறியாளர் த சணல்குமார், குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைதம்பி, குழித்துறை நகராட்சி ஆணையாளர் (பொ) குறள்செல்வி, நகர்மன்ற பிரதிநிதிகள், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



