களியக்காவிளை, செப். 22 –
செங்கல் சிவபார்வதி கோயிலில் நவராத்திரி விழா செப்டம்பர் 23-ம் தேதி துவங்கி விஜய தசமி தினத்தன்று நிறைவடைகிறது. களியக்காவிளை அருகே செங்கல் மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழா நடப்பது வழக்கம். இந்த வருடம் நவராத்திரி விழா செப்டம்பர் 23-ம் தேதி நாளை துவங்குகிறது. கோயில் கோபுரத்தின் கீழ் சிறப்பாக அமைக்கப்பட்ட சரஸ்வதி மண்டபத்தில் நவராத்திரி விழா நடக்கிறது. விழாவினை சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி திருவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி விழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்படும், அதைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் சரஸ்வதி மண்டபத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 30 ஆம் தேதி மாலை சரஸ்வதி மண்டபத்தில் பூஜை நடைபெறும்.
அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி அன்று காலை 7.30 மணிக்கு பூஜை தொடங்கும், வித்யாரம்ப விழாக்கள் காலை 8 மணிக்கு தொடங்கும். கோயில் தலைவர் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி குழந்தைகளுக்கான வித்யாரம்ப விழாவை நடத்துவார்.
வித்யாரம்ப விழாவை நடத்த ஆர்வமுள்ள பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


