சென்னை, ஜூன் 15 –
சென்னை காவேரி மருத்துவமனை உலகிலேயே மிகவும் மேம்பட்ட இரண்டு இதயத்துடிப்பு புலநீக்க (PFA) சிகிச்சை திட்டங்களை அறிமுகம் செய்தது. இத்திட்ட அறிமுகத்தின் வழியாக, உலகின் மிக அதிநவீன பி.எஃப்.ஏ தொழில்நுட்பங்களான ‘மெட்டிரானிக் பல்ஸ்செலக்ட்’ ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையிலும், ‘பயோசென்ஸ் வெப்ஸ்டர் வேரிபல்ஸ்’™ வடபழனி காவேரி மருத்துவமனையிலும் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த தொடக்க விழாவில் அமெரிக்காவில் சேர்ந்த சர்வதேச இதய சிகிச்சை நிபுணர்கள், காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழுவுடன் இணைந்து இந்த பி.எஃப்.ஏ திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இதயத் துடிப்பு கோளாறுகளில், குறிப்பாக மிகவும் பொதுவான ‘ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்’ எனப்படும் சீரற்ற இதயத் துடிப்புப் பிரச்சினைக்கு இதயத்துடிப்பு புலநீக்க சிகிச்சை என்பது அடுத்த தலைமுறை அதிநவீன சிகிச்சையாகும். பி.எஃப்.ஏ தொழில்நுட்பமானது துல்லியமாகக் கட்டுப்படுத்தப்பட்ட மின் அலைகளைப் பயன்படுத்துகிறது. இது இதயத் துடிப்பு கோளாறுகளுக்குக் காரணமான செல்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழிக்கிறது.
மின்னாற்றல் மூலம் சவ்வுகளில் துளை உருவாக்கல் (எலக்ட்ரோபொரேஷன்) என்று அழைக்கப்படும் இந்த புதிய முறை, பாதிக்கப்பட்ட இதயத் திசுக்களை மட்டும் குறிவைத்து குணமாக்குகிறது. உலகளவில் இதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இதயத் துடிப்பு கோளாறுகளைக் குணப்படுத்துவதில் மிக முக்கியமான அண்மைக்கால கண்டுபிடிப்பாக பி.எஃப்.ஏ (PFA) அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
இதய நோய் சிகிச்சையில் முதுநிலை நிபுணர் டாக்டர் என்.எஸ். சிவகடாட்சம் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு காவேரி மருத்துவமனையின் புதிய “ஹார்ட் ரிதம் பேக்கேஜ்” என்ற சிறப்பு பரிசோதனைத் திட்டத்தை தொடங்கிவைத்தார். இதய மின்உடலியல் பிரிவு இயக்குநர் டாக்டர் தீப் சந்த் ராஜா தெரிவித்ததாவது:- “எங்கள் இரண்டு மையங்களிலும் மூன்று நோயாளிகளுக்கு இந்த புதிய முறையில் வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான நெஞ்சுப் படபடப்பால் அவதிப்பட்டு வந்த 69 வயதுப் பெண்மணி ஆவார். மருந்துகளால் குணமாகாத அவருக்கு, வலது தொடைப் பகுதி நரம்பு வழியாக வெறும் ஒரு மணி நேரத்திற்குள் இந்த பி .எஃப். ஏ சிகிச்சை செய்யப்பட்டது. மறுநாளே மிகக் குறைந்த மருந்துகளுடன் அவர் வீடு திரும்பினார் என்று தெரிவித்தார்.
காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில்: சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட நவீன கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, எங்கள் நோயாளிகளுக்கு உலகத்தரத்தில் சிகிச்சையை வழங்குகிறோம். சிகிச்சைகளை எளிதாக்கும், பாதுகாப்பை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களே எங்களின் முதன்மைத் தேர்வாகும். இந்த பி.எஃப். ஏ அறிமுகம் அதற்குச் சிறந்த சான்றாகும்.”
‘பல்ஸ்செலக்ட்’ மற்றும் ‘வேரிபல்ஸ்’ ஆகிய இரண்டு மேம்பட்ட வசதிகள் மூலம் தமிழ்நாடு, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த இதய சிகிச்சை இனி சென்னையிலேயே கிடைக்கும் வகையில் காவேரி மருத்துவமனை முன்னிலைப்படுத்தி கொண்டிருக்கிறது என்றார்.



