ஈரோடு, ஆக. 14 –
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 28-வது பட்டப்பளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றி வரும் கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் முனைவர் விஜயபிரபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற 72 மாணவர்களுக்கு பதக்கத்துடன் பட்டமும் 1186 மாணவர்களுக்குப் பட்டமும் என மொத்தம் 1258 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் கற்கும் கல்வி வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வி கற்று உயர வேண்டும். பெற்றோர்கள் சொல் கேட்டு நடந்து கொள்ள வேண்டும். உயர் கல்வி வாய்ப்புகளை பயன்படுத்துவதோடு தொழில் முனைவோராக முன்னேறி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் கொங்கு வேளாளர் தொழில் நுட்பக்கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் ஆர். குமாரசாமி, செயலாளர் பி. சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.வீ. ரவிசங்கர், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் பி.டி. தங்கவேல், கொங்கு வேளாளர் தொழில் நுட்பக்கல்லூரி அறக்கட்டளையின் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹெச். வாசுதேவன் வரவேற்றார். கல்லூரியின் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.



