தக்கலை, டிச. 11 –
கொற்றிகோடு அருகே மணக்காவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ராஜன் (53) லாரி டிரைவர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 8 மாதங்கள் முன்பு கிறிஸ்டோபர் ராஜனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயந்தி கணவரை பிரிந்து ஒரு மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் கிறிஸ்டோபர் ராஜன் தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவரது சகோதரி மகன் குமார் என்பவர் வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு கிறிஸ்டோபர் ராஜன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டனர்.
இது குறித்து கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிறிஸ்டோபர் ராஜன் எப்படி இறந்தார்? விஷம் குடித்த தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது.



