நாகர்கோவில், பிப். 27 –
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியில் நெல்லை மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக வந்த இடத்தில் டிரைவர் செல்லப்பாண்டி (33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே பகுதி தங்கபாண்டியன் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை போலீஸ் கைது செய்யவில்லை எனவும், குற்றவாளிகளுக்கு போலீஸ் துணை புரிவதாக கூறி 300 க்கும் மேற்பட்டோர் இன்று நாகர்கோவில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குவிந்தனர்.
மேலும் ஊரு விட்டு ஊரு பிழைக்க வந்த தங்கள் உறவினரை கொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும், இல்லை என்றால் மாநில அளவில் போராட்டம் வெடிக்கும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
முன்விரோதத்தில் செல்ல பாண்டியை வரவழைத்து பணம் தருவதாக கூறி கொலை செய்ததாக தெரியவரும் நிலையில், போலீசார் சம்பந்தமில்லாத அப்பகுதியில் சுற்றி திரிந்த வயதான நபரை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளனர்.



