கன்னியாகுமரி, மே 30 –
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி பெருந்திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா இன்று (சனிக்கிழமை) வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. திருவிழாவையொட்டி தினமும் அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மாலை சமய உரையும், இரவு இன்னிசை கசச்சேரியும், இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது வந்தது.
9 ஆம் திருவிழாவான நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடந்தது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், 6 மணிக்கு ஆன்மீக உரையும். இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனையும் நடைபெற்றது.
இரவு 9 மணிக்கு கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பகவதி அம்மனை வாகனத்தில் எழுந்தருள செய்து ஊர்வலமாக தெப்பக்குளத்துக்கு எடுத்து வந்து தோரணங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருள செய்து தெப்பக்குளத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம்வர செய்தனர்.
தெப்பத் திருவிழாவையொட்டி தெப்பக்குளத்தை சுற்றி தோரணங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நள்ளிரவு முக்கடல் சங்கத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



