களியக்காவிளை, மே 11 –
விளவங்கோடு கிராம ஊராட்சிக்குட்பட்ட அஞ்சாங்கோடு முதல் செறுவாவிளை வரையிலான ரோட்டில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்ப்பட்டு தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வலியுறுத்தி மாவட்ட கலக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ.க மேற்புறம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சஜின் மற்றும் சக்தி கேத்திர பொறுப்பாளர் சதீஷ், ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விளவங்கோடு கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சாங்கோடு முதல் செறுவாவிளை வரையிலான ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளது. இவ்வாறு தேங்கியுள்ள மழை நீரில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. ஆகவே மழைநீரில் கொசு உற்பத்தியாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் பல வித நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே அப்பகுதியில் கழிவுநீர் ஓடை அமைத்து சுகாதார சீர்கேட்டை சீரமைக்குமாறு மாவட்ட கலக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



