கன்னியாகுமரி, பிப். 16 –
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக களமிறங்க ஆர்.எஸ். பார்த்தசாரதிக்கு வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
வாக்காளர்களை கவரும் தேர்தல் அறிக்கைகள்
தமிழக தேர்தல் களத்தை பொருத்தவரை வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை என்பது எப்போதுமே மிக முக்கியம் வாய்ந்தவையாக திகழும். அதன் அடிப்படையில் ,தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் திமுகவும் அதிமுகவும் அதிதிவிரம் காட்டி வருகின்றனர்.கடந்த தேர்தல் அறிக்கையின் போது திமுக அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரிதளவில் பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த திட்டம் திமுக ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருந்தது என்றே கூறலாம். இத்திட்டத்ததை திமுக அரசு கனகச்சிதமாக நிறைவேற்றி வரும் நிலையில், இத்திட்டத்தை சமநிலைபடுத்த அதிமுக தலைமை மகளிருக்கு ரு.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல் கட்ட தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. தற்போது வரை இரண்டு கட்டமாக அதிமுக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீச தொடங்கியுள்ளது. இதற்கு ஈடுகொடுத்து வாக்காளர்களை தங்கள் வசபடுத்த திமுக தலைமை தேர்தலை அறிக்கை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டணி கணக்குகள்
தேர்தலில் இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் கூட்டணி கணக்குகள் இடம் பெறுகின்றன. வலுவான கூட்டணியாக இருந்து வரும் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியும் அமைந்துவிட்டது என்றே கூறலாம். தற்போது வரை 50-50 என்ற சூழலில் தான் இருகட்சிகளின் கூட்டணியும் அமைந்துள்ளது.
கரணம் தப்பினால் மரணம் என்ற கணக்கில் வேட்பாளர் தேர்வில் மும்முரம்…..
தேர்தலில் வெற்றி பெற தேர்தல் அறிக்கை, கூட்டணி கணக்குகள் எனவுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக வேட்பாளர் தேர்வு மிக முக்கிய அம்சங்களாக அரசியல் கட்சிகளுக்கு இடம் பெறுகின்றன. கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றில் வருகிற தேர்தலில் திமுக வும் அதிமுக வும் தராசு எடையில் சமபலத்தில் இருந்து வரும் நிலையில் வேட்பாளர் தேர்வு கடும் சவாலான விஷயமாக உள்ளது. 234 தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரண்டு கட்சிளுக்குமே தங்கள் கட்சிகளுக்குள்ளேயே கோஷ்டி பூசல் வலுவாக உள்ளது.
கரணம் தப்பினால் மரணம் என்ற கணக்கில் வேட்பாளர் தேர்வு இருந்து வரும் நிலையில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக தீவிரம் காட்டி வரும் பட்டியலில் திமுக மாவட்ட துணைச்செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுவந்தன.
ஆனால் இவர்கள் அனைவரும் திரைக்கு முன்னால் பேசப்பட்டு வந்தவர்கள் மட்டுமே, இவர்களில் யாரை வேட்பாளராக களம் இறங்கினாலும் நண்டு கதையாகிவிடும் என்பதை உணர்ந்த திமுக தலைமை,கோஷ்டி பூசலில் சிக்கிகொள்ளாத மற்றும் சொந்த செல்வாக்கு அதிகமுள்ளவர்களை வேட்பாளராக களம் இறக்க வேண்டும் என்று திமுக தலைமை முடிவு செய்து அதனடிப்படையில் வேட்பாளர் தேர்வு பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.
இதற்காக தான் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேரடியாக குமரி மாவட்டம் வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் தான் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தளவாய்சுந்தரத்திற்க்கு இத்தொகுதியில் நல்ல பெயரும் உள்ளது.
அதிமுக -பா.ஜ., கூட்டணி என்பதால் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் திமுக வெல்வது என்பது ஆழ்கடலில் மூழ்கி முத்து எடுப்பதற்கு சமமான விஷயம். எனவே, திமுக தலைமை வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
ஆர்.எஸ்.பார்த்தசாரதி
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி. அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த இவர் முகிலன்குடியிருப்பு ஊர் தலைவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார்.
ஆர்.எஸ்.பார்த்தசாரதிக்கு சமூகத்தில் நற்பெயர் இருந்து வருகிறது. துறைமுக எதிர்ப்பு குழு போராட்ட விஷயத்தில் இவர் மிக முக்கிய பங்காற்றியவர் என்பதால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், மணக்குடி, கீழமணக்குடி, ஆரோக்கியபுரம் உள்ளிட்ட மீனவ சமுதாய மக்கள் நம்பிக்கையும் பெற்றுள்ளார்.
ஆகவே இவருக்கு வாய்ப்பு வழங்கினால் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், மீனவ சமூதாய வாக்குகளை பெறுவது எளிது எனவும், கோஷ்டி பூசலில் இருந்து திமுக தன்னை தற்காத்து கொள்ளலாம் எனவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாமிதோப்பு தலைமைபதி குரு ஜனா யுகேந்த்
அதற்கு அடுத்தபடியாக சாமிதோப்பு தலைமைபதி குருமார்களில் ஒருவரான வக்கீல் ஜனா யுகேந்தினை வேட்பாளராக களம் இறங்கினாலும் இதே சூழல் ஏற்பட்டு, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.,வின் வேகத்தை கட்டுபடுத்த முடியும் என திமுக தலைமை நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் சாமிதோப்பு தலைமை பதி குரு ஒருவரை வேட்பாளராக களம் இறக்குவதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகமாகவும் தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் அய்யாவழி மக்கள் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் திமுக தலைமை வேட்பாளர் தேர்வில் அதிதீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


