நாகர்கோவில், அக்டோபர் 16 –
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்கள், லஞ்ச பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நேற்று முன்தினம் சோதனை நடந்ததில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமா, சிவசங்கரி ஆகியோர் தலைமையில் எஸ்ஐ பென்சாம், எஸ்எஸ்ஐ முருகன் ஆகியோர் நேற்று மதியம் முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் ராஜலட்சுமியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.33 ஆயிரத்து 50 பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் இடம் இருந்து ரூ. 7,600 ம், மற்ற இருவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரத்து 950 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தவிர 8 பட்டு புடவைகள், 22 பட்டு சால்வைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை செய்யும் போது அங்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, ஆய்வாளர்கள் இல்லை. அவர்களை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மதியம் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
இந்நிலையில் இரவு சுமார் 9 மணி அளவில் வட்டார போக்குவரத்து அதிகாரி, 2 ஆய்வாளர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வாகன சோதனைக்கு சென்று இருந்ததாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி, ஆய்வாளர்களின் அறைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் எந்தவித பணமும் சிக்கவில்லை. இந்த சோதனை இரவு சுமார் 11 மணி வரை நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.



