சுசீந்திரம், டிச. 26 –
மணக்குடியில் 21-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் பங்கு தந்தை அஜன்சார்லஸ் தலைமையில் சுனாமி நினைவு சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து ஆலயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சுனாமியால் இறந்த 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு வந்தனர்.
அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது உறவினர்களை பறிகொடுத்தவர்கள் அழுது புலம்பிய காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும் பங்கு தந்தையர்கள் ஆஜன்சார்லஸ், ஷாஜன்செசில் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மணக்குடி பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு பேரவை மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மீனவர்கள் யாரும் கடல் தொழிலுக்கு செல்லவில்லை.



