திருவட்டாறு, ஜுன் 1 –
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலைச் சுற்றி 12 காவுக்கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஒன்றான காங்கரை ஸ்ரீராமன்கோணம் தர்ம சாஸ்தா ஆலயம் தற்போது அழகுற புதுப்பிக்கப்பட்டுள்ளது. மூலவராக ஐயப்பசுவாமி இங்கு காட்சி தருகிறார். உப தெய்வங்களாக் கணபதி, வெண்ணெய் கிருஷ்ணர், நாகர், புவனேஷ்வரி, ஸ்ரீராம சீதா லெஷ்மண அனுமான் சன்னதிகள் உள்ளன.
இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று 31-ம் தேதி கணபதி ஹோமத்தை தொடர்ந்து பிரதிஷ்டை நடந்தது. பின்னர் வேதமந்திரம் ஒலிக்க, மேளதாளம் முழங்க ஏற்றக்கோடு மடம் மதுசூதனர் நம்பூதிரி தலைமையில் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் தந்திரி கோகுல் நாராயணரு மகா கும்பாபிஷேகத்தை நடத்தினார்.
புலவர் கு. ரவீந்திரன் நேர்முக வர்ணனை வழங்கினார். கும்பாபிஷேகத்தின்போது வானில் கருடன் வட்டமிட்டது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்திபஜனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் ஜி. சிவ சஜூ, செயலர் ஆர். சுனில், பொருளாளர் எம். பிரவீன், துணைத்தலைவர் மணிகண்டன், துணைச்செயலாளர் ஜெகன், துணை பொருளாளர் எஸ்.பி. அக்ஷய் மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.



