கன்னியாகுமரி, ஏப். 16 –
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் கன்னியாகுமரி நகராட்சி சார்பில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்றிட வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காந்தி மண்டபத்தின் நுழைவு வாயில் பகுதியில், அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகங்களை உள்ளடக்கி கண்கவர் ரங்கோலி கோலம் வரையப்பட்டிருந்தது. இது சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் “வாக்குரிமை நமது கடமை”, “நேர்மையாக வாக்களிப்போம்”, “ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர். தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் என்றும், எவ்வித தூண்டுதலுக்கும் ஆளாகாமல் நேர்மையாக ஜனநாயக கடமையாற்றுவோம் என்று வாக்காளர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
நடைபெற்ற நிகழ்வில் கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, சுகாதார ஆய்வாளர் அந்தோணி, சுகாதார மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், சுகாதார களப்பணியாளர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



