நாகர்கோவில், டிசம்பர் 20 –
குமரி மாவட்டத்தில் “அன்பு கரங்கள்” திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கலெக்டர் அழகுமீனா கூறியதாவது: அன்புக்கரங்கள் திட்டத்திற்கு குழந்தைகளை கண்டறிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட வறிய நிலையில் உள்ள குடும்பங்களின் விவரங்கள் பெறப்பட்டு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் உருவாக்கப்பட்ட செயலி மூலம் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் (மகளிர் திட்டம்) ஆகியோரால் மாவட்ட அளவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
தன்னார்வர்களால் பரிந்துரை செய்யப்பட்ட குழந்தைகளின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, குமரி மாவட்டத்திற்குட்பட்ட இருவரையும் இழந்த 84 மாணவர்களுக்கும், பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டு சென்ற 76 குழந்தைகளுக்கும், பெற்றோர் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகளுக்கும், பெற்றோர் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோயுடன் வாழ்ந்து வரும் 12 குழந்தைகளுக்கும் என மொத்தம் 188 குழந்தைகளுக்கு மாதாந்திர நிதி உதவியாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான 105 குழந்தைகள் இத்திடத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். எனவே தகுதி உள்ள மாணவ மாணவியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்று அன்பு கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



