நாகர்கோவில், அக். 9 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் பொது சுகாதாரம் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் இணைந்து நடத்திய “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்:
தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்களிடையே போதைப்பழக்கத்தினை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் அரசு மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகாமையில் புகையிலைபொருட்கள், போதைப்பொருட்கள் விற்கவோ, உபயோகப்படுத்தவோ கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவ மாணவியர்கள் போதைப்பொருட்கள் உட்கொள்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். என கூறினார்.
தொடர்ந்து ஜெயசேகரன் மருத்துவக் கல்லூரி, தெ.தி.இந்துக் கல்லுரி மற்றும் ஸ்டெல்லா மேரி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா துவக்கி வைத்தார்.
பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் துவக்கி வேப்பமூடு சந்திப்பில் முடிவடைந்தது. மேலும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஏற்றுக்கொண்டார்கள். நடைபெற்ற பேரணியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. அரவிந்த் ஜோதி, மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் ஷெனின், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.வி. ஜெயராம பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.



