நாகர்கோவில், பிப். 18 –
கன்னியாகுமரி ஜீரோ பாய்ண்ட் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் பகுதியில் நேற்று காலையில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு திருநங்கையின் சடலம் கிடந்தது. போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்தது கேரளாவை சேர்ந்த திருநங்கை பத்மினி (54) என்பது தெரிய வந்தது. தற்போது அவர் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மர்ம சாவு என வழக்கு பதிவு செய்துள்ளார்கள். மேலும் போலீசார் சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.
யாராவது திருநங்கை பத்மினியை அழைத்து செல்கிறார்களா? அல்லது அவர் மட்டும்தான் சென்றாரா? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் இறப்பு எப்படி நேர்ந்தது என்பது தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர். அவர் இறந்து மூன்று நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது போன்று சுங்கான் கடை மலைப்பகுதியில் உள்ள குளத்திலும் பாதி உடல் அழுகி எலும்பு கூடான நிலையில் கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. இரணியல் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்கு குமரி அரசு மருத்துவ கல்லூரி அனுப்பி வைத்தனர். இறந்தவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சாக்கு முடையில் கட்டி குளத்துக்குள் வீசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. ஆனால் ஒரு வாரமாகியும் இன்னும் துப்பு துலங்கவில்லை. குமரியில் இது போன்ற மர்ம சாவுகள் தொடர்ந்து வருகிறது.


