விளாத்திகுளம், அக். 07 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட
கே.குமரெட்டியாபுரம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் வெள்ளையம்மாள்புரம், வேலாயுதபுரம், இனாம் சுப்ரமணியபுரம், குமாரகிரி கிராமங்கள் கலந்து கொண்டன.
இம்முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற்றனர். இம்முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சென்று ஆய்வு செய்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து பொது மக்களின் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கையை வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். மேலும் பொது மக்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வளிக்கும் வகையில் மின்வாரிய அட்டை பெயர் மாற்றம், ரேஷன் அட்டை திருத்தம் உள்ளிட்ட உத்தரவு ஆணைகள் பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், இமானுவேல் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



