ராமநாதபுரம், ஜுன் 14 –
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்களில் இளைஞர்கள் கல்வியில் தனி கவனம் செலுத்தி வந்தால் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கு தான் எப்போதும் உதவ தயாராக இருப்பதாக மிகவும் உருக்கமாக காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையம் கடுகு சந்தை சத்திரம் கிராமத்தில் “உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி” திட்ட முகாமில் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். கடுகு சந்தை சத்திரம் கிராமத்தில் நடைபெற்ற “உங்கள் ஊரில் உங்கள் எஸ் பி” முகாமில் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் உரையாற்றும்போது, “கிராமத்தில் கண்காணிப்பு கேமரா வைப்பதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினார். மேலும் கிராம இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி மேல் படிப்பிற்குத் தேவையான உதவிகள் செய்வதாகவும் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் ஆயுதங்கள் வைத்துக்கொண்டு புகைப்படங்கள் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். மேலும் கிராம மக்களிடம் நல்லுணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இனிப்புகள் வழங்கி மக்களிடம் சகஜமாகக் கலந்துரையாடி மக்களின் நிறை குறைகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டு அறிந்தார். அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டி அவர்களிடம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஊக்குவித்துப் பேசினார்.