புதுச்சேரி, செப். 1 –
புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், காரைக்கால் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி எம்எல்ஏவுமான சந்திர பிரியங்கா தன்னை தொடர்ந்து இரண்டு அமைச்சர்கள் சித்திரவதை செய்து வருகிறார்கள் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் கட்டவுட் விவகாரம் தொடர்பாக எனக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு பின்னால் அமைச்சர் ஒருவர் இருக்கிறார். என்னுடைய வீட்டுக்கு செல்லும் வழியிலே உளவாளிகளை வைத்து கண்காணிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியதாவது: நான் அமைச்சராக இருந்தபோது எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் கடந்து வந்தேன். இன்னமும் அமைச்சர் ஒருவர் டார்ச்சர் செய்கிறார். அவர் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை. எல்லாரையும் குற்றம் சொல்ல முடியாது.
இங்கே பொதுமக்களுக்கும் தேவையில்லாமல் சிக்கல்கள் உண்டாக்கப்படுகின்றன. ஒரு அமைச்சராக இருப்பது எவ்வளவு பொறுப்பு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் எம்எல்ஏவும் சாதாரண பதவி அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு பெரும் பொறுப்பு.
தமிழ்நாட்டைப் போல இல்லாமல் பாண்டிச்சேரியில் நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுகிறோம். ஆனால் பதவிக்கு வந்த பிறகு மக்களை மறந்து விட்டு எங்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்கு இணங்கவில்லை என்றால் எவ்வளவு சித்திரவதை செய்ய முடிகிறதோ அவ்வளவு செய்கிறார்கள். எம்எல்ஏவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் இதே நிலைதான்.
சந்திர பிரியங்காவின் இந்த குற்றச்சாட்டு தற்போது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



