நாகர்கோவில், ஏப். 13 –
தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கன்னியாகுமரியில் நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவர் மகாதானபுரம் ரவுண்டானாவில் வந்தபோது வேனை விட்டு கீழே இறங்கி ரவுண்டானாவை சுற்றி விசில் ஊதியபடி சைக்கிள் ஓட்டினார். அப்போது அங்கு திரண்டிருந்த தவெக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்த சிறிய மேடையில் ஏறி விஜய் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் கன்னியாகுமரி மக்களே, காரைக்குடி மக்களே வணக்கம். அன்று என்னால் காரைக்குடியில் பேசமுடியாமல் போனது. உங்கள் அன்புக்கு கோடானு கோடி நன்றி. தவெக ஆட்சி அமைந்தால் மேற்கொள்ளும் சில நலத்திட்டங்களை இங்கே அறிவிக்கிறேன்.
நமது ஆட்சியில் லஞ்சம் இன்றி ஒவ்வொருவருக்கும் நலத்திட்டங்கள் போய் சேரும். இதற்காகவே ஆதார் அட்டை போன்று தமிழ்நாடு அடையாள அட்டை உருவாக்கப்பட்டு, ஏஐ தரவுகளுடன் லஞ்சம் இல்லாத நலத்திட்டங்கள் வழங்கப்படும். இப்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்து தான் வேலை ஆகிறது. இந்த லஞ்சம் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, அமைச்சருக்கும் செல்கிறது.
மேலும் தமிழ்நாடு சேவை உறுதி திட்டம் உருவாக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும் ஆப் வாயிலாக ஓட்டுனர் உரிமம், மற்றும் பிற சேவைகள் இடைத்தரகர்கள், லஞ்சம் இல்லாமல் உங்கள் கையில் வந்து சேரும்.
தமிழ்நாட்டில் 10.5 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. இதில் ஒவ்வொரு செலவும் நம்ம பிள்ளைகள், கிராம திட்டங்களில் இருந்து திருடப்பட்டது. மக்களிடமிருந்து கூடுதலாக ஒரு ரூபாய்கூட வருவாய் இல்லாமல் ஏமாற்றிய இந்த அரசு இனி போதும் தானே. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல் 4 முனை போட்டி என எதுவும் இல்லை. இங்கு திமுகவிற்கும், தவெகவிற்கும் இரு முனை போட்டி தான் உள்ளது.
இந்தியாவின் ஏஐ தலைநகராக தமிழ்நாடு மாறும். தமிழகத்தில் முதல் ஏஐ தொழில்நுட்ப பல்கலை கழகம் உருவாக்கப்படும். தமிழக மக்கள் நலத்திட்டங்களை பெற பிரத்யேக கார்டு வழங்கப்படும். நலத்திட்டங்களை பெற விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை. ஏஐ தொழில்நுட்ப உதிவியுடன் அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி உருவாக்கப்படும். மக்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் புதிய இணையசேவை உருவாக்கப்படும்.10,000 கையெழுத்துக்களுட்ன மனு அளி்ததால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஏஐ சிட்டி உருவாக்கப்படும். தமிழகத்தின் முக்கிய மாநகரங்களில் ஏஐ புத்தாக்க மையம் உருவாக்கப்படும். எனவே உங்கள் பிள்ளைக்கு, உங்கள் தம்பிக்கு, உங்கள் அண்ணனுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்கட்டும். இவ்வாறு விஜய் பேசினார்.
பின்னர் மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை மூன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை வாகனத்தில் ரோடு ஷோ மேற்கொண்ட விஜயம் ஜீரோ பாயிண்டை அடைந்ததும் அங்கு வேனில் மேல் ஏறி கூடிநின்ற மக்களை பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்தார். ஆனால் குமரியில் கட்சியின் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டும், குமரி மாவட்ட வளர்ச்சி குறித்து விஜய் எதுவும் பேசவில்லை. ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு மீண்டும் சென்னை புறப்பட்டார்.



