மார்த்தாண்டம், ஜனவரி 31 –
மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ மணிகண்டன். இவர் சாங்கை என்ற பகுதியில் ஜுவல்லரி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள் 2 கிராம் கம்மல் இரண்டை காண்பிக்க கேட்டுள்ளனர். அதை ஸ்ரீ மணிகண்டன் காட்டியுள்ளார். அவற்றை வேண்டாம் என கூறிவிட்டு இரண்டு பேரும் கடையை விட்டு வெளியே கிளம்பியுள்ளனர்.
அவர்கள் சென்றவுடன் அங்கு இருந்த நகைகளை சரிபார்த்த போது ஸ்ரீ மணிகண்டனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த 2 கிராமுடைய ஒரு மோதிரம் மற்றும் 3 கிராம் எடை கொண்ட கம்மல் என 5 கிராம் நகைகளை திருடி சென்றது தெரிந்தது. உடனே சம்பவம் குறித்து ஸ்ரீ மணிகண்டன் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


