கன்னியாகுமரி, நவ. 6 –
கன்னியாகுமரி கடற்கரையில் இன்று காட்சி கோபுரம் அருகே பாறைகளின் மீது நின்று கடலை ரசித்த சுற்றுலா பயணி சிவாஜி ராவ் (26), சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர், கடலலைகளில் சிக்கி கடலில் விழுந்தார். இப்பகுதி மரணப் பாறைகள் என அழைக்கப்படும் மிக ஆபத்தான பகுதி என்பதால் பொதுமக்கள் நுழைய தடைசெய்யப்பட்டிருந்தது.
தவறி விழுந்த சிவாஜி ராவ் சுமார் இரண்டு மணி நேரம் கடலில் உயிர் போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை, கடலோர காவல்துறை, மீனவர்கள், மற்றும் உள்ளூர் பங்குத்தந்தை ஒருவர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் படகுகள் செல்ல முடியாத இடம் என்பதால், மிதவைப் பொருட்களுடன் கடலில் குதித்து நீந்தி சென்று அவரை உயிருடன் கரை சேர்த்தனர்.
சம்பவத்தை நேரில் கண்ட சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும், உயிரை பணயம் வைத்து செயல்பட்ட மீனவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர். கடலில் இருந்து மீட்கப்பட்ட சிவாஜி ராவ் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.



