மார்த்தாண்டம், மே 29 –
குமரி மாவட்டம் அருமனை பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை இன்று திடீரென மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து கட்சியினரும் கடையை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பள்ளி, பேருந்து நிலையம் மற்றும் தேவாலயங்கள் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளில் 717 கடைகள் மூடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், இந்த மாதம் 18-ஆம் தேதி அருமனை டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பெண்கள் உட்பட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அருமனை பகுதி எப்போதும் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதியாகும்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் கடையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்ததை தொடர்ந்து கடை மூடப்பட்டது.
இந்த நிலையில் இன்று 13 நாட்களுக்கு பிறகு திடீரென மீண்டும் கடை திறக்கப்பட்டு விற்பனைக்கு தயாரானதால் பாஜக, அதிமுக, காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கடை முன்பு திரண்டு மீண்டும் போராட்டத்தை துவக்கினர்.
இதற்கிடையில் மது வாங்க வந்தவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு டாஸ்மாக் உயர் அதிகாரிகள் யாரும் சம்பவ இடததில் வரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்திருந்து இந்த கடை நிரந்தரமாக பூட்டும் வரை கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



