நாகர்கோவில், செப்டம்பர் 19 –
சுதந்திரப் போராட்ட வீரரும் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய போராடிய வருமான தியாகி பொன்னப்ப நாடாருக்கு குமரி மாவட்டத்தில் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து இதற்கான இடம் தேர்வு நடைபெற்றது. அதன்படி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடாருக்கு சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.50 லட்சம் செலவில் சிலை அமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அழகு மீனா தலைமை வைத்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் சிலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம். எல். ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் பொன்னப்ப நாடாரின் வாரிசுகள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபரிடம் கூறியதாவது: குமரி மாவட்ட மக்களின் குமரி கோமதகம் என்று போற்றப்படுகின்ற எங்களுக்கு எல்லாம் அரசியல் ஆசனாக திகழ்கின்ற அமரர் பொன்னப்ப நாடார் ஸ்தாபக காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர். இந்த மாவட்டத்தின் மக்களின் அன்பையும் நம்பிக்கையும் பெற்று ஒரு குமரி கோமதமாக திகழ்ந்தவர். அவருடைய நினைவால் நாகர்கோவிலில் இருக்கக்கூடிய இந்த பொன்னப்பர் திடல் பக்கத்தில் அவருக்கு ஒரு திருவுருவ சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்டத்தின் மக்கள் சார்பில் முதல்வரிடம் தெரிவித்த நேரத்தில், அவர் எந்த மறுப்பும் கூறாமல் இன் முகத்தோடு அதற்காக 50 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் இந்தப் பகுதி தேர்வு செய்யப்பட்டு இன்று குமரி கோமதகம், பொன்னப்ப நாடாருடைய திருவுருவச் சிலை இந்த பகுதியில் அமைய இருக்கிறது. இந்த நிகழ்வில் நாங்கள் எல்லோரும் வந்து அவருடைய திருவருட்சிலை அடிக்கல் நாட்டுப் பணியை துவங்கி வைப்பது எங்களுக்கு ஒரு பெரும் பெயராக கருதுகிறோம். ஏனென்றால் எங்களுடைய அரசியலில் அவர்தான் ஒரு முன்னோடி. இந்த நிகழ்வில் நாங்கள் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். குமரி மாவட்டத்தின் சார்பிலும் அவருடைய குடும்பத்தார் சார்பிலும் நாங்கள் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பணி சீக்கிரமாக முடியும். வெகு விரைவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருகை தர உள்ளார். வருகை தருகிற போது இந்த சிலை அவருடைய திருகரங்களால் திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



