ஈத்தாமொழி, டிச. 10 –
ஈத்தாமொழி அருகே உள்ள தேரிமேல் விளை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு மணிகண்டன் (36), பிரபு ராஜ் (34) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். பிரபுராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வந்து, தற்போது ஊரில் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சைலஜா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பிரபுராஜுக்கும் சைலஜாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சைலஜா வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். இதற்கு தனது தாயார் ஸ்ரீமதிதான் காரணம் என்று அவரிடம் பிரபுராஜ் தகராறில் ஈடுபட்டு, தாயாரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை மணிகண்டன் தட்டி கேட்ட போது அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் கம்பியால் தம்பி பிரபுராஜை தரையில் தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்தவரை பக்கத்தில் உள்ள தண்ணீர் தொட்டில் தூக்கி வீசி விட்டு சென்று விட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரபுராஜை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பிரபுராஜ் உயிரிழந்தார். இது குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



