விளாத்திகுளம், மே 20 –
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள எம்.எல்.ஏ மார்க்கண்டயேன், தனக்கு சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பளித்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
அப்போது விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், நான் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்ததை விட தற்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக மக்களின் அனைத்து குறைகளையும் முன்னெடுத்து சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.
அதனைத்தொடர்ந்து பேசுகையில்: காங்கிரஸ் ஒரு பச்சை துரோகி. திமுக கூட்டணியில் வெற்றி பெற்று திமுக முதுகில் குத்தி விட்டனர். இதோடு காங்கிரஸ் மூன்றாவது முறையாக திமுகவின் முதுகில் குத்திவிட்டது. அதேபோல் ஒரு அரசியல் அனுபவம் இல்லாத சினிமா வாழ்க்கையை மட்டும் நம்பி மக்கள் வாக்களித்து தற்போது ஒரு முதல்வரை தேர்ந்தெடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. மக்கள் சேவை செய்யாமல் சினிமாவை மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்தவர்களுக்கு பதிலாக, மக்கள் பிரச்சனையும், அரசியல் கட்டமைப்பும், அனைத்து உயிர்களுக்கான அரசியலை பேசும் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு வாக்களித்தால் நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன் என்று எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் தொடர்ந்து பேசினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



