நாகர்கோவில், ஜூலை 22 –
நாகர்கோவில் சிறைக்குள் நடந்த வியாபாரி சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பட்டுள்ளது. சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (34). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டு அருகில் மளிகை நடத்தி வந்தார். பாரதிய ஜனதா கிளை பொறுப்பிலும் இருந்து வந்த இவருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவி, 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 9 ம் தேதி சபரிவர்மன் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்து இருந்ததாக கூறி தென்தாமரைகுளம் போலீசார் கைது செய்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த 13ம் தேதி அதிகாலையில் சபரிவர்மன் சிறையில் இறந்தார். குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த மருத்துவ குழு பரிசோதனையில் சபரிவர்மன் சிறைக்குள் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, சிறை வார்டன் ஜெகன், வார்டன் சுரேஷ், தலைமை சிறைக்காவலர் சிவகுமார் மற்றும் 8 கைதிகள் என 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை அடுத்து அரசு சார்பில் சபரிவர்மன் மனைவிக்கு அரசு வேலை, ரூபாய் 10 லட்சம் நிவாரணம், மகனின் படிப்புக்கான வைப்புத் தொகை ஆகிய நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கை சிபிசிஐடி க்கு மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். அரசியல் கட்சிகளும் இதை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் மரிய பிரான்சிஸ்கா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை 14 பாக்கெட் புகையிலை வைத்திருந்ததாக சபரிவர்மன் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய ஜாமீனில் விட வேண்டிய ஒரு வழக்கில், அவரை சிறையில் அடைத்து, உயிர் பறிபோய் இருப்பதால் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.



