தேனி, ஏப். 23 –
தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தனித்தொகுதிக்குட்பட்ட வடதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. பொதுமக்கள் அதிகாலை நேரத்திலிருந்தே வரிசையாக வந்து உற்சாகமாக தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
அத்துடன், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங் 23.4.2026 காலை சுமார் 8.00 மணியளவில் வாக்குச்சாவடிக்கு வந்து முறையான அடையாளச் சரிபார்ப்புக்குப் பிறகு தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர், அங்கு நிலவும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வரிசை ஒழுங்கு, பாதுகாப்பு பணிகள் ஆகியவை சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து வாக்குப்பதிவு சீராக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்த வாக்குச்சாவடியில் எந்தவித இடையூறும் இன்றி அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து ஜனநாயக விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.



